வேண்டாம் விபரீத விளையாட்டு
நல்ல திடகாத்திரமான பயில்வானுக்கு வயிறுவலி
வந்தால் ‘ அவனுக்கு தைரியம் இல்லை’ என்றோ ‘நீ நினைச்சா வயிற்றுவலியை
நிறுத்திவிடலாம், முயற்சி செய்’ என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் அது எதாவது ஒரு
நோயின் அறிகுறியாக இருக்கலாம். அது போல் மனஅழுத்தமும் ஒரு நோய் தான். இது ஒரு
நோய்நிலை என்பதை பலதரப்பினரும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், காலம் தாமதிப்பதும்
வளரிளம் பருவத்தினரை மேலும் பாதிப்பதுடன், தற்கொலை வரை சென்றுவிடுகிறது. சில
நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றிய பின்னர் தான் இவர்கள் மன அழுத்த
நோயால் பாதிக்கப்பட்டது தெரியவரும். அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாத ஒரு
புறக்கணிக்கப்பட்ட பிரச்சனையாகத் தான் இன்னமும் உள்ளது. எனவே ஆரம்ப அறிகுறிகள்
தெரியும்போதே மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. தேவைப்பட்டால்
மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் தாழ்வுமனப்பான்மையா?
பல நேரங்களில் மனஅழுத்தம் என்பது
தாழ்வுமனப்பான்மைக்கு ஈடான ஒன்றாக தவறாக கருதப்படுவதும் சிகிச்சைக்கு செல்ல காலம்
தாழ்த்துவதற்கு காரணமாகிறது.
தாழ்வுமனப்பான்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரின்
குணாதிசயம் தான். ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு நோயாகும். தாழ்வுமனப்பான்மை என்பது
மன அழுத்தநோயின் மற்ற அறிகுறிகளுடன் ஒரு அறிகுறியாக வர வாய்ப்பு இருக்கிறதே தவிர
இரண்டும் ஒன்றல்ல. இதனால் பெரும்பாலான நேரங்களில் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும்
வளர் இளம்பருவத்தினர் தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பதாக பெற்றோரால் கருதப்பட்டு பல
அறிவுரைகளுக்கும், மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான சிகிச்சைகளுக்கும்,
சிலவேளைகளில் தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவது “வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சுவது” போன்றது தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிமாணவன்
ஒருவன் தற்கொலை முயற்சி செய்ததற்கு சொன்ன காரணம் வித்தியாசமானது. “அட்வைஸ்,
அட்வைஸ். ஸ்கூல் போனா டீச்சர் அட்வைஸ், வீட்டுக்கு வந்தா அப்பா அட்வைஸ், வெளியே
போனா சொந்தக்காரங்க அட்வைஸ். என் மன நிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை” என்பது
தான் அவன் தற்கொலை முயற்சிக்கு காரணம்
தேவை விழிப்புணர்வு
புள்ளிவிபரங்களின்படி மன அழுத்த நோயால்
பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஏறக்குறைய சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சமம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, கவனத்திற்குரியதும் கூட. ஆனால்
நிஜத்தில் தினமும் சர்க்கரை நோய்க்கு மருத்துவம் செய்யவருபவர்களை ஒப்பிடும்போது,
மனஅழுத்தத்திற்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமே. அப்படியே
வருபவர்களில் பலர் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்துதான் சிகிச்சைக்கு வரும்
அளவிற்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பது வேதனைக்குரியது. சில சமயங்களில் மற்ற
துறையை சார்ந்த மருத்துவர்கள் கூட இதை ஒரு நோய்நிலையாக பார்க்காமல் காலம்
தாழ்த்துவது மருத்துவக்கல்வி திட்டத்தில் மனநல மருத்துவத்திற்கு கொடுக்கப்படும்
முக்கியத்துவத்தை அதிகரிக்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது. சமீபத்தில் பாலிவுட்
நடிகை தீபிகா படுகோன், தான் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து
மீண்டுவந்ததை வெளிப்படையாக கூறியது நல்ல ஒரு எடுத்துக்காட்டு. வரும் 2020 ஆம்
ஆண்டு முதல் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில் தற்போது
முதலிடத்தில் இருக்கும் இருதயநோயை பின்தள்ளிவிட்டு முதலிடத்தை ஆக்கிரமிக்கப்போவது
இந்த மன அழுத்த நோய் தான் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பது இதன்
முக்கியத்துவத்தை உணர்த்துகிறது
No comments:
Post a Comment