Friday, 27 May 2016

ஹிஸ்டீரியாவின் அறிகுறிகளும், தீர்வும் (Symptoms of Hysteria)


ஹிஸ்டீரியாவில் வர வாய்ப்புள்ள நோய்கள் 
  • வலிப்பு நோய் 
  • திடீரென ஏற்படும் மயக்கம்  
  • உணர்ச்சியற்ற கோமா போன்ற நிலை 
  • பக்கவாதம் 
  • கை,கால் நடுக்கம் 
  • பேசமுடியாமை 
  • நடக்க இயலாமல் தடுமாற்றம் 
  • உடல் மரத்துபோதல் 
  • மூச்சடைப்பு

இதன் முக்கியத்துவம் என்ன?
இதில் பிரச்சனையே இந்த மனநோயானது நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவது தான். இதனால் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் தேவையான எல்லா பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்ற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம். இல்லையென்றால் ‘பழி ஓர் இடம் பாவம் ஓர் இடம்’ என்பது போல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன் தேவையற்ற மாத்திரை  மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறும்.

வலிப்பில்லாத வலிப்பு
சமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவரது அம்மா திடீர்மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் எடுத்தபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறி அழைத்து வந்திருந்தனர். அந்த பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றை தெளிவாக கேட்டுப்பார்த்த போது, 4 வருடங்களுக்கு முன்பு அவரது அப்பா இறந்த பிறகு அந்த பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்து விட்டதாகவும் அதற்கு பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்த பெண்ணின் வலிப்பு அறிகுறியின் தன்மையும், நரம்பு பாதிப்பினால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துபோகவில்லை. மாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பினால் தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய்க்கோளாறு பிடித்திருப்பதாகவும் கூறி சூடு போட்டு சிகிச்சை(?) செய்திருக்கிறார்கள். இது ஒரு உதாரணம் தான். உண்மையில் இது போல பலர் தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தை கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிபரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்தவகையை சேர்ந்தவைதான் என்று நிருபித்திருக்கிறார்கள். ஆனால் 25% க்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது. 

எப்படி கண்டுபிடிப்பது?
இந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால் பெற்றோர்களுக்கு இது மன நல பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்க வாய்ப்பில்லை தான். ஆனால் சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையை புரிந்து கொள்ளலாம். 
  • இந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக சில நாட்களுக்குள் மனதை காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் இருக்கும்
  • அந்த உடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லா பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது
  • சில வேளைகளில் அதிக கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல
  • இந்த நோய் அறிகுறிகள் மூலம் அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருக்கும். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளிசெல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்த தொந்தரவு திரும்ப ஏற்படும்.
  • அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்கு தெரிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை,கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி இழுக்கும். ஆனால் இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவது போல கூட இருக்கும்
  • இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்த பாதிப்பும் இல்லாதது போல சாதாரணமாகவும் இருப்பார்கள்
  • முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் தீவிர பாதிப்புகள் ஏற்படும்.

என்ன சிகிச்சை?
ஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாக குணப்படுத்தக்கூடியதே. மனதை பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னோசிஸ்(Hypnosis), நார்கோ பரிசோதனைகள் (Narcoanalysis) உட்பட பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன. ஒருவேளை மன அழுத்தநோயின் அறிகுறியாக இருக்குமானால் மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களை திட்டுவதாலோ, வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று கூறுவதாலோ பிரச்சனை கூடுமே தவிர குறையாது. அதே நேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்ககூடாது. அப்பா அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாக பகிர்ந்தளிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். 

No comments:

Post a Comment