Saturday, 25 April 2015

யார் குழந்தையின் பெற்றோர் ( Who are the real parents?)


ஓடி விளையாடு பாப்பா என்று அறைகூவல் விடுத்த பாரதி இன்று மட்டும் இருந்திருந்தால் வீடியோகேமில் ஓட்டி விளையாடு பாப்பா என பாடியிருப்பார். கால் வலிக்க தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய் காசு கொடுத்து கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்து விட்டோம். கோடை விடுமுறை வேறு ஆரம்பித்துவிட்டது, பள்ளிநாட்களில் வீட்டில் இருக்கும் சில மணிநேரங்களிலேயே களபேரத்தை ஏற்படுத்தும் பிள்ளைகளை இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கபோகிறோமோ என்று பெற்றோர் புலம்புவதும் கேட்கத்தான் செய்கிறது.
கற்றலும் குணநலமும்
குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு
அசைவிலும் பெற்றோர் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவைகளையே பரதிபலிக்கின்றது. எனவே மரபணுக்கள் மட்டுமல்லாது சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களும் ஒரு குழந்தையின் குணநலங்களை தீர்மானிக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் ‘இவனை டிவி பார்க்க விட்டால் ஒரு தொந்தரவும் இருக்காது’ என குழந்தைகளின் போக்குக்கு விட்டுவிடுகிறோம்.அதாவது இந்த காலசூழலில் பள்ளியிலும் பெற்றோரிடமிருந்தும் கற்றுக்கொள்வதைவிட டிவி சொல்லிக்கொடுக்கும் பாடம் தான் அதிகம்.
கோழிப்பண்ணைகளில் சென்று பார்த்தால் அங்கு உள்ள கோழிகள் 24 மணிநேரமும் குனிந்த தலை நிமிராமல் தீனி தின்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும், ஒரே மாதத்தில் கறிக்கு தயாராகும் அளவிற்கு எடையும்  கூடி விடும். அது போலதான் இன்று கல்வியுடன் குணநலங்களை வளர்க்க வேண்டிய கல்விக்கூடங்களும் பத்தாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் ‘பிராய்லர் கூடங்களாக’ மாறி வருகின்றன. எனவே இக்காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கருத்தரங்கம் நடத்தி சொல்லிகொடுக்க வேண்டிய அளவுக்கு இன்றியமையாதானது மட்டுமின்றி அரிதானதாகவும் மாறி வருகின்றது.
பெற்றோரின் பங்கு
ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அடிப்படை பாடம். வேலைப்பழுவை காரணம் காட்டுவதை விட யாருக்காக இவ்வளவு உழைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால் இதன் உண்மை விளங்கும். பிள்ளைகள் எதிர்பார்ப்பது உங்கள் சம்பாத்தியத்தை விட உங்களுடன் செலவிடும் நேரத்தை தான். அவன் ‘பைக் வேண்டும், விலையுயர்ந்த வாட்ச் வேண்டும் என எதிர்பார்க்கிறான், நான் அதிகம் சம்பாதித்தால் தானே அதை நிறைவேற்ற முடியும்’ என நீங்கள் கேட்கலாம். நியாயம் தான், ஆனால் சிறுவயதிலிருந்தே நேரம் செலவிட்டு பாருங்கள். அவனுடைய எதிர்பார்ப்பு குறையும், உங்கள் நிலைமையை முழுமையாக புரிந்து கொண்ட பிள்ளையாக, ஆக்கப்பூர்வமான குறிக்கோளை உடையவனாக இருப்பான்.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை தான். பொறுமையை கையாண்டு ரசித்து செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அன்றாடம் நடக்கும் விஷயங்களில் சில மாற்றங்களை செய்தாலே பல பெரிய விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஒரு காரின் ஸ்டியரிங்கை சிறிது திருப்பினாலே அந்த கார் முழுவதுமாக திரும்புவது போலதான் ‘BEHAVIOUR THERAPY’  என்றழைக்கப்படும் நடத்தை சீர்திருத்த பயிற்சிகளுக்கு பெரிய மாற்றங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் திறன் உண்டு.

No comments:

Post a Comment